விண்ணில் பாய 'கார்டோசாட்-3' தயார்

சென்னை : 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் ராணுவத்திற்கு உதவும் 'கார்டோசாட் - 3' என்ற செயற்கை கோளை 'பி.எஸ்.எல்.வி. - சி46' ராக்கெட் உதவியுடன் நாளை (நவ.,27) விண்ணில் செலுத்துகிறது.

நாட்டின் பாதுகாப்பு தகவல் தொடர்பு போன்றவற்றின் ஆய்வுக்காக பி.எஸ்.எல்.வி. - ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது இஸ்ரோ. தற்போது ராணுவ ஆய்வுகளுக்கு உதவுவதற்காக கார்டோசாட் - 3 செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதனுடன் அமெரிக்காவின் 13 செயற்கைகோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. - சி46 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தில் இருந்து நாளை காலை 9:28 மணிக்கு விண்ணில் பாய்கிறது.


உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு உள்ள கார்டோசாட் செயற்கைகோளில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் நாட்டின் எல்லை பகுதிகளை துல்லியமாக புகைப்படம் எடுத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும்.